Tuesday, July 17, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்..! - 2


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


‘அமுதைப் பொழியும் நிலவே’
பாட்டு வந்தா நிறுத்திடுவேன்!


‘‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...’’

எனக்குப் பிடித்த பாட்டு. எப்ப வந்தாலும் விரும்பிக் கேட்பேன். எந்தப் படத்துப் பாட்டுன்னு எனக்குத் தெரியாது அப்ப. ஆனா அந்தப் பாட்டை அடிக்கடி பாடுகிற ஒரு பொண்ணை மட்டும் எனக்குத் தெரியும். அப்பவும், இப்பவும் அழகான பொண்ணு. தாவணி போட்டிருப்பாள். ரெண்டு சடை! குண்டு முகம்! சிவப்பு நிறம்! உயரம்னு சொல்ற அளவுக்கு உருவம். நெத்தியில பொட்டு, கன்னத்தில் புன்னகை. பேசினா பாடுகிற மாதிரி இருக்கும். பாடினா கேட்கிற மாதிரி இருக்கும்.

ஆமா! இனிமையான குரல். சுவையான பேச்சு. அழகுக்கு ஏற்ற அடக்கமான குணம்.

பேசுவா, சரியாக் கேட்காது. பாடுவா, சரியாப் புரியாது. முகத்தைக் காண்பிப்பாள், சரியா தெரியாது. அவ்வளவு நளினம். அதுக்குத்தானோ பெயர் பெண்மை! (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா..?) ஆமா! மறந்துட்டேன். அது என் உறவுக்காரப் பொண்ணு.

பலவாட்டி, பல பேர் அந்தப் பொண்ணுகிட்ட சொல்றதைக் கேள்விப் பட்டிருக்கேன். ‘‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அதிர்ஷ்டசாலி’’ன்னு.

எங்க அண்ணிக்கு ஆசையாம்- அந்தப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. எனக்குத் தெரியாது.
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு படிக்க மெட்ராஸ் புறப்படும் போது என்னை வாழ்த்தி அனுப்பினாள். அடடா! இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம்! ரெண்டு சடை! சிகப்பு நிறம்1 நெத்தியில பொட்டு! கன்னத்தில புன்னகை! அதே பார்வை.

மூணு மாதம் கழிச்சிப் பெங்களூர் போனேன். அவங்க அப்பாவுககு டிரான்ஸ்ஃபர் வந்து மைசூர் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. மெட்ராஸ் வந்து ஆறு மாதம் கழிச்சிப் போனேன். ‘அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு வீட்டுல கேட்டாங்க. ‘முடியாது’ன்னு சொன்னேன். நான் அந்தப் பொண்ணை பொண்டாட்டியா பார்த்ததும் இல்ல, நினைச்‌சதும் இல்ல. வீட்டில சொன்னாங்க... அவ நினைச்சிருக்காளாம். நான் நினைக்கலியே..?

மெட்ராஸ் வந்து ஒன்பது மாதம் கழிச்சிப் போனேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எங்கேயோ ஒரு மூலையில லேசா குத்துகிற மாதிரி இருந்தது. ஏன்னு எனக்கே தெரியாது.

மூணு வருஷம் கழிச்சி, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு ஒரு கன்னடப் பட ஷுட்டிங்குக்குப் போயிருந்தேன். ஓட்டல் சுஜாதாவில என் ரூமுக்கு போன் வந்தது. பேசினேன் - ஒரு பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். எப்பவோ எங்கேயோ அடிக்கடி கேட்ட குரல். ஆமா... அந்தப் பொண்ணு குரல்தான். ‘‘உங்களைப் பார்க்க வர்றோம்’’ன்னு சொன்னாங்க. சந்தோஷமா வரச் சொன்னேன்.

கதவைத் தட்டுகிற சப்தம். திறந்தேன். ஒரு ஆண், கூட ஒரு அம்மா, இடுப்பில ஒரு குழந்தை, கையில ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை எங்கேயோ ஓடிச்சி. அவரு குழந்தையைப் பிடிக்க ஓடினாரு. அந்தப் பொண்ணு உருவம் மட்டும் என் முன்னால.. அதே பொண்ணு!

பார்த்தேன், ஸ்தம்பித்து நின்னேன். குண்டு முகம் நீளமாயிருக்கு. இரண்டு சடை ஒண்ணா இருக்கு. பொட்டு மாறி குங்குமம் வந்து அதுவும் கலங்கி இருக்கு. தாவணி போயி புடவை வந்திருக்கு. நான் பார்த்த குழந்தை தாயா இருக்கா. அவள் பார்த்த சிவாஜிராவ், ரஜினிகாந்த்தாயிருக்கான்! அதே பார்வை, ஆனால் அந்த அழகு இல்லை. அதே புன்னகை, ஆனா அந்தக் கவர்ச்சி இல்லை. அந்த ரெண்டு பிரகாசமான கண்கள் ஒளி குறைந்து என்னைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரி இருக்கு. நான் குற்றவாளின்னு நெஞ்சில குத்தற மாதிரி இருக்கு.

திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்- என் வாழ்க்கையை. எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கே தெரியாது. குழந்தை அழற சப்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு குரல் கேட்டது. ‘‘என் பெயர் கணேஷ்... இவளோட புருஷன்...’’

பல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!

‘அமுதைப் ப‌ொழியும் நிலவே!’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்.

No comments:

Post a Comment